news

News May 1, 2024

தாத்தா வீட்டில் வசிக்கும் ஆனந்த் மகிந்திரா

image

மகிந்திரா குழும சொத்து மதிப்பு ₹1.50 லட்சம் கோடியாகும். அந்நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திராவின் சொத்து மதிப்பு மட்டும் ₹17,000 கோடி ஆகும். பெரும் கோடீஸ்வரரான ஆனந்த் மகிந்திரா, ஆடம்பர பங்களாவில் வசிக்காமல், தனது தாத்தா கே.சி. மகிந்திரா மும்பையில் முன்பு வாடகைக்கு இருந்த வீட்டை வாங்கி வசித்து வருகிறார். தாத்தா வாழ்ந்த வீடு என்பதற்காக ₹270 கோடிக்கு வீட்டை அவர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

சாலையோர உணவகங்களில் பூனைக் கறி

image

சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக, பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும்போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளை பிடித்துச் செல்வதாகவும், அவர்களை விசாரித்தபோது ₹100க்கு விற்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனால், சாலையோர உணவகங்களில் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

News May 1, 2024

கோவின் சான்றிதழ்களில் இருந்து மோடி படம் நீக்கம்

image

கொரோனா தடுப்பூசி போடுகையில் அளிக்கப்படும் கோவின் சான்றிதழ்களில் இருந்து மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவோருக்கு அளிக்கப்படும் அந்த சான்றிதழில் மோடி படத்துடன் ‘இந்தியா ஒன்றிணைந்து கொரோனா-2019ஐ தோற்கடிக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தற்போது, அந்த வாசகம் மட்டும் சான்றிதழில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

முறையான தூக்கம் இருதயத்தை பாதுகாக்கும்

image

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது, நிம்மதியான தூக்கம், போதுமான தூக்கம் ஆகியவை இருதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு 10 முதல் காலை 6 மணி வரை தினமும் முறையாக கடைபிடித்தால் பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம் என்கிறது ஆய்வு. நீங்கள் முறையாகத் தூங்குகிறீர்களா?

News May 1, 2024

ஆமை வேகத்தில் அரை சதம் அடித்த ருதுராஜ்

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பொறுமையாக பேட்டிங் செய்துவரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகள் சரியத் தொடங்கியதால் பொறுமையாக ஆடிவந்த அவர், 44 பந்துகளில் 55* ரன்கள் அடித்துள்ளார். தற்போது, CSK 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. இன்று CSK எவ்வளவு ரன்கள் எடுக்கும்.?

News May 1, 2024

இக்கட்டான காலங்களில் ராகுல் இத்தாலிக்கு ஓடி விடுவார்

image

நாடு பிரச்னைகளை சந்திக்கும் நேரத்தில் எல்லாம் இத்தாலிக்கு ராகுல் முதல் ஆளாக ஓடி விடுவார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாட்டில் கொரோனா பரவியபோது, இத்தாலிக்கு ராகுல் ஓடி விட்டதாகவும், நிலநடுக்கம், வெள்ளம் ஏற்பட்டபோதும் இத்தாலிக்கு சென்று விட்டதாகவும் கூறினார். வெளிநாட்டில் இருக்கும்போது கூட இந்தியாவை ராகுல் விமர்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

News May 1, 2024

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நெல்சன்

image

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன். விஜய்யை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் படங்களை இயக்கிய இவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். ‘ஃபிளமண்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதை அறிவித்துள்ள அவர், மே 3 ஆம் தேதி தான் தயாரிக்கும் முதல் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் CSK

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ், ரஹானே பொறுமையாக ஆடிவந்தனர். ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் அதே ஓவரில் 3ஆவது பந்தில் தூபே ரன்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா(2) LBW முறையில் ஆட்டமிழந்தார். CSK 10 ஓவரில் 71/3 ரன்கள் எடுத்துள்ளது.

News May 1, 2024

திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி நீக்கம்

image

திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு உடன்படாத காரியங்களில் அவர் ஈடுபட்டதால் அவர் வெளியேற்றப்படுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கொல்கத்தா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் தபஸ் ராயுடன் குணால் கோஷ் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரைப் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

தேர்தலில் வெற்றி பெற பாஜக எதையும் செய்யும்

image

தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என மம்தா தெரிவித்துள்ளார். முதல் 2 கட்ட வாக்கு விகிதம் திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய அவர், தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றா? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார். மே.வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!