Mayiladuthurai

News April 12, 2024

பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ரமலான் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நேற்று நடைபெற்றன. இதில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீர்காழி பகுதிக்குட்பட்ட 6 பள்ளி வாசல்களிலும், திருவெண்காட்டில் 2, புதுப்பட்டினத்தில் 3, ஆனைக்காரன் சத்திரத்தில் 7, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் 2 என மொத்தம் 20 பள்ளிவாசல்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News April 12, 2024

மயிலாடுதுறை: உணவுப்பொருள்கள் வழங்கல்

image

சீர்காழி நகர ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய நல்லிணக்க மையம் சார்பில் ரமலான் பண்டிகையின் முக்கிய நிகழ்வான கூட்டு ஃபித்ரா எனும் ஏழை மக்களுக்கு நோன்பு பெருநாள் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை எளிய 75 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருள்கள் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

News April 11, 2024

வைத்தீஸ்வரன் கோவிலில் கார்த்திகை வழிபாடு

image

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத கார்த்திகை ஒட்டி இன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு 21 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் சண்முகார்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News April 11, 2024

ஆரத்தழுவி ரமலான் வாழ்த்து கூறிய ஊராட்சி மன்ற தலைவர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறையில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசலில் இன்று உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதா பானு சாதிக் கைகுலுக்கி ஆரத்தழுவி அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News April 11, 2024

மத்திய பாதுகாப்பு படை வாகன சோதனை

image

சீர்காழி அடுத்த கொள்ளிடம் சோதனைச்சாவடியில் தேர்தலை முன்னிட்டு இரவும் பகலுமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் தணிக்கைக்கு உட்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படையினருடன் சோதனை சாவடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 11, 2024

மயிலாடுதுறை: உலவும் சிறுத்தை… மக்களே உஷார்!

image

மயிலாடுதுறை நகரில் மீண்டும் சிறுத்தை வந்ததாக கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும், காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.

News April 10, 2024

மயிலாடுதுறையில் காவலர்களுக்கு ஆலோசனை

image

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் அன்று எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

News April 10, 2024

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை

image

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (11-04-2024) டெல்டா மாவட்டங்களில் (திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

மயிலாடுதுறையில் சிறுத்தை குறித்து தகவல் இல்லை!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

News April 10, 2024

மயிலாடுதுறையில் தீவிர பிரச்சாரம்

image

மயிலாடுதுறை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காளி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்ற வேட்பாளருக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாம்பழம் சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

error: Content is protected !!