news

News April 10, 2024

ரோடு ஷோ நடத்தினால் ஓட்டுப் போடுவார்களா?

image

பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றார். மேலும், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

News April 10, 2024

டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

image

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சமீபத்தில் ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜ்குமார், ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது அந்தக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News April 10, 2024

பாமக நிர்வாகி வீட்டில் ஐ.டி. சோதனை

image

கடலூரில் உள்ள பாமக பொறுப்பாளர் சுரேஷ் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் தொகுதியில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடும் நிலையில், தேர்தல் பொறுப்பாளராக சுரேஷ் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், எருக்கன் குப்பம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

News April 10, 2024

எது உண்மையான ரம்ஜான் தேதி?

image

ரம்ஜான் பெருநாள் கொண்டாடுவதில் இருவேறு இஸ்லாமிய தரப்பினருக்கு மாற்றுக் கருத்து நிலவுவதால் சிலர் இன்றும் சிலர் நாளையும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, நேற்று பிறை தெரியாததால் ஏப்ரல் 11ஆம் தேதி பெருநாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதனை ஏற்காத தவ்ஹீத் ஜமாஅத் மக்கள், இன்றே நோன்பை கைவிட்டு பெருநாள் கொண்டாடினர்.

News April 10, 2024

தமிழகம் வருகிறார் அமித் ஷா

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்யவிருக்கிறார். ஏற்கெனவே இரண்டுமுறை அவர் தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 12ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் அவர், மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர், 14ஆம் தேதி காலையில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.

News April 10, 2024

நிலவில் இந்தியர் தரையிறங்க இதுதான் முதல்படி

image

‘சந்திரயான் 4’ திட்டம் நிலவில் இந்திய வீரர்கள் தரையிறங்குவதற்கான முதல் படி என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2040ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் அவசியமாகிறது. அதன் ஒரு பகுதியாக ‘சந்திராயன் 4’ மூலம் நிலவின் சில மாதிரிகளை எடுத்து வந்து ஆராய திட்டமிட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.

News April 10, 2024

விண்ணுலகம் சென்றார் ஆர்.எம்.வீரப்பன்

image

சென்னையில் நேற்று வயது மூப்பால் காலமான முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின்மயானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட பூத உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த ஆர்.எம்.வீ, அதிமுகவின் எம்.ஜி.ஆர், ஜானகி ,ஜெ.வின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.

News April 10, 2024

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு மோசடி

image

தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள் சட்டப்படி, ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளை நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும். ஆனால், SBI தகவல்படி, 3 ஆண்டுகள் நிறைவடையாத 20 நிறுவனங்கள், ₹103 கோடி வரை நன்கொடை வழங்கியுள்ளன. இது பற்றி X-இல் பதிவிட்டுள்ள பிரசாந்த் பூஷன், தேர்தல் பத்திரங்கள் மூலம் பல மோசடிகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

News April 10, 2024

இந்திய வம்சாவளி மாணவர்கள் மரணம்! பின்னணி என்ன?

image

அமெரிக்காவில் நடப்பு ஆண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனைவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், துப்பாக்கிச்சூடு, கடத்தல், தற்கொலை உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய காரணங்கள் இறப்புகளுக்கான பின்னணியாக இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இனவெறியை மாணவர்களின் மரணங்களுக்கான காரணமாக கருத முடியாது எனக் கூறப்படுகிறது.

News April 10, 2024

அனில் அம்பானிக்கு ரூ.8,000 கோடி தர வேண்டாம்

image

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு ரூ.8,000 கோடி இழப்பீடு தர வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.8,000 கோடி இழப்பீடு வழங்க டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் ஒரே நாளில் 20% சரிவை சந்தித்துள்ளன.

error: Content is protected !!