news

News March 30, 2024

ஒவ்வொரு இந்தியன் தலையிலும் ரூ.1.5 லட்சம் கடன்

image

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 67 ஆண்டுகளாக 2014 வரை நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் மட்டும் ரூ.150 லட்சம் கோடி கடன் பெற்றதால், நாட்டின் மொத்த கடன் ரூ.205 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜக அரசு வாங்கிய கடனால் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ரூ.1.5 லட்சம் கடன் சுமை ஏறியுள்ளது என வேதனை தெரிவித்தார்.

News March 30, 2024

உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது

image

அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யத் தவறினால், நீதிமன்றங்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளாா். இது தொடர்பாக பேசிய அவர், “அரசாங்கங்களும், அதன் அதிகாரிகளும் தனி நபர் உரிமைகளை பாதிக்கும் வகையில், பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்கள். அதனை நீதித்துறை வேடிக்கை பார்க்காது. பலமுறை கடுமையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளோம்” என்றார்.

News March 30, 2024

ராகுலை எதிர்க்கும் வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்

image

வயநாட்டில் ராகுலுக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 237 வழக்குகள் சபரிமலை போராட்டத்திற்காகவும், 5 வழக்குகள் கட்சி போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகவும் போடப்பட்டுள்ளது. இந்த தகவலை வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, எர்ணாகுளம் பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

News March 30, 2024

மோடியின் வருகை தமிழகத்திற்கு வரப்பிரசாதம்

image

பிரதமர் மோடி அடிக்கடி வருவது தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஒவ்வொரு முறை மோடி வரும்போதும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை தந்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். குமரியில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய கப்பல், ஹெலிகாப்டர் தளம், இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News March 30, 2024

சேலத்தில் முதல்வருடன் கமல் சந்திப்பு

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கமல், தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அத்துடன், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சேலத்தில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலினும் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இருவரும் இன்று சேலத்தில் சந்தித்து பேசினர்.

News March 30, 2024

மூன்று நாள்கள் டாஸ்மாக் இயங்காது

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல், தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப். 18, தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப். 20ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது. அத்துமீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

ராமராஜனை பார்த்து ரஜினியே பயந்தார்

image

ராமராஜன் படங்களின் வசூலை பார்த்து ரஜினிகாந்தே பயந்ததாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். ராமராஜன் ஹீரோவாக நடிக்கும் ‘சாமானியன்’ பட விழாவில் பேசிய அவர், “ரஜினி சாரே ஒருமுறை ராமராஜனுக்கு எப்படி இவ்வளவு கலெக்ஷன் வருகிறது என என்னிடம் ஆச்சரியப்பட்டார். அந்த அளவுக்கு பாப்புலராக இருந்த மனிதர் ராமராஜன். இந்த படத்திலும் அவர் நிச்சயம் ஜொலிப்பார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது”எனத் தெரிவித்தார்.

News March 30, 2024

BREAKING: பாஜக – பாமகவினர் இடையே மோதல்

image

கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தின் போது பாஜக – பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முத்துநகரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது வாகனத்தின் முன் யார் நிற்பது என இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனால், அங்கு சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியது.

News March 30, 2024

எங்கள் அமைதிக்கு காரணம் முதல்வர்

image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் இங்கு வந்துபோக முடிகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளாா். தயாநிதி மாறனை ஆதரித்து பேசிய அவர், “பிரதமர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதால் தான், அண்ணாமலையால் தமிழ்நாட்டில் தொடர்ந்து அவதூறாக பேச முடிகிறது. முதல்வர் எங்களை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார், அதனால் பொறுமையாக இருக்கிறோம்” எனக் கூறினார்.

News March 30, 2024

மஞ்சுமெல் பாய்ஸை பாராட்டிய ரஜினிகாந்த்

image

சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. குணா குகையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலைக் குவித்த மலையாள படம் என்ற சாதனையை படைத்தது. உலக அளவில் இப்படம் ₹200 கோடிக்கும் மேல் வசூலை குவித்த நிலையில், படக்குழுவுக்கு வாழ்த்து குவிகிறது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!