news

News May 1, 2024

70,772 கிலோ ஹெராயினை காணவில்லையா?

image

70,772 கிலோ ஹெராயின் காணாமல் போனது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 – 2020 வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் காணாமல் போன விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் வழக்குத் தொடுத்திருந்தார். காணாமல் போன 70,772 கிலோ ஹெராயினின் மதிப்பு ₹5 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் கையாளக்கூடாது

image

பிரதமர் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே தவிர, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “வாக்கு வங்கிக்காக மத அரசியல் செய்யும் பிரதமரைக் கண்டிக்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை அது வெறுப்புப் பேச்சு. அவசியப்படும் இடங்களில் பாஜகவை வன்மையாகக் கண்டிப்போம்” என்றார்.

News May 1, 2024

சென்னையின் அடையாளம் ‘பிராட்வே’ பேருந்து நிலையம்

image

ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வளர்ந்த சென்னை நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று ‘பிராட்வே’ சாலை. வட சென்னையை மத்திய சென்னையுடன் இணைக்கும் இந்த சாலையின் தெற்கு முனையில்தான் பிரம்மாண்ட ‘பிராட்வே பேருந்து நிலையம்’ அமைந்துள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம் ஆகிய நவீன சென்னை புறநகர் பேருந்து நிலையங்களுக்கு முன்னோடி பிராட்வேதான். தற்போது இதனை நவீனமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

News May 1, 2024

ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்

image

மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2.24 லட்சம் குடும்பங்களுக்கும், ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள், திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய கார்டு தடையின்றி கிடைக்கும் எனத் தெரிகிறது.

News May 1, 2024

ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

image

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபத்தில் 6 பேர் பலியான நிலையில், 60க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News May 1, 2024

லோகேஷ் கனகராஜ் சட்டச் சிக்கலை எதிர்கொள்வாரா?

image

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய ‘விக்ரம்’, தயாரித்த ‘பைட் கிளப்’ போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளார். இப்போது ‘கூலி’ டீசரில் அனுமதி பெறாமல் தங்கமகன் படப் பாடலையும் மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். காப்புரிமை சட்டத்தை மீறி இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், அவர் மீது இளையராஜா தரப்பு கோபத்தில் உள்ளதாம். இதனால் அவரும் சட்டச்சிக்கலை எதிர்கொள்ளலாமெனக் கூறப்படுகிறது.

News May 1, 2024

1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை

image

1 கோடி முறை ‘கோவிந்த கோடி’ எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுதத் தொடங்கியதாக தெரிவித்த அவர், சிறுவயது முதலே ஏழுமலையானை இருவேளையும் வழிபடுவதாகக் கூறினார். ஆன்மிகத்தை வளர்க்க ‘கோவிந்த கோடி’ திட்டத்தை திருமலை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 1 கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்களுக்கு விஐபி தரிசன சலுகை அளிக்கப்படுகிறது.

News May 1, 2024

சீரியலைப் பார்த்து திருடிய சிறுவன்

image

குஜராத் மாநிலம் சூரத்தில் 13 வயது சிறுவன் ‘C.I.D’ டிவி சீரியலால் கவரப்பட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். சீரியலில் வருவதுபோல, பைப்பைப் பயன்படுத்தி 2 தளங்கள் இறங்கிய அச்சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடியுள்ளார். குளியலறையில் இருந்த கால் தடங்களால் சிறுவன் சிக்கிய நிலையில், செல்போன் வாங்க திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

News May 1, 2024

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்

image

ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ₹2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் வசூலானதை விட 12.4% அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டியாக ₹43,846 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ₹53,538 கோடியும் வசூலாகியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பாக 13.4% வரையும், இறக்குமதிகளில் 8.3% வரையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

குரூப்-1 தேர்வில் வென்ற பீடித்தொழிலாளி மகள்

image

தென்காசியைச் சேர்ந்த பீடிச்சுற்றும் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அரசில் காலியாக உள்ள குரூப் 1 அளவிலான 95 பணி இடங்களில் அவர், துணை ஆட்சியர், டி.எஸ்.பி., பதவிகளில் ஏதேனும் ஒன்றில் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது விடாமுயற்சியால் 3ஆவது முறையாக தேர்வெழுதி வென்ற இவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!