News May 13, 2024

‘வேட்டையன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி

image

‘ஜெயிலர்’ படத்தையடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, மும்பை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News May 13, 2024

12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, தி.மலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News May 13, 2024

IPL: மழையால் போட்டி தாமதம்

image

குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், அகமதாபாத்தில் தற்போது மழை பெய்துவருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றபின் ஆட்டம் தொடங்கும் எனத் தெரிகிறது. மழை தொடர்ந்தால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. ப்ளே ஆஃப்க்கு செல்ல GT அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

News May 13, 2024

ஜூலை 1 முதல் மகளிருக்கு ₹1 லட்சம்

image

தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1 லட்சம் தர உள்ளதாகவும், INDIA கூட்டணி வெற்றிபெற்றதும் ஜூலை 1 முதல் இந்த பணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

News May 13, 2024

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், மாணவர்கள் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 13, 2024

INDIA கூட்டணி வெற்றிபெற்றதும் சிறையில் இருந்து வருவேன்

image

திஹார் சிறையில் தன்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் 2 கேமராக்கள் வைத்து தன்னை கண்காணித்ததாகவும், அந்த வீடியோவை சிறைத்துறையினர் பிரதமர் மோடிக்கு அனுப்பியதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். பாஜக இவ்வளவு செய்தும் கட்சியினர் ஒற்றுமையாக இந்ததற்காக பாராட்டிய அவர் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், சிறையில் இருந்து வெளியே வருவேன் என்றார்.

News May 13, 2024

ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த பெண்

image

நாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் பிஹாரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் பெண் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வெறும் தண்ணீரை மட்டும் குடித்து வாழ்த்து வரும் அவர், ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற தனது ஆசையை மகன்களிடம் கூறி இன்று வாக்களித்துள்ளனர்.

News May 13, 2024

பாகிஸ்தானுக்கு வளையல்களை அனுப்புவோம்

image

பாகிஸ்தானுக்கு வளையல்களை தமது அரசு அனுப்பி வைக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், INDIA கூட்டணி கட்சியினர் பாகிஸ்தானை கண்டும், அந்நாட்டின் அணுஆயுதங்களை கண்டும் அஞ்சுவதாகவும், அக்கட்சிகள் கோழைகள் என்றும் கூறினார். தமது அரசு பாகிஸ்தானுக்கு வளையல்களை அணிவிக்கும், பாகிஸ்தானிடம் போதிய வளையல்கள் இல்லையெனில் தயாரித்து அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

News May 13, 2024

ஜெயக்குமார் மரணம்: அப்பாவுவிடம் விசாரணை?

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மர்ம மரணம் குறித்து தென்மண்டல ஐஜி கண்ணன் பேட்டியளித்தார். அப்போது ஜெயக்குமார் உடலுடன் கடப்பா கல் கட்டப்பட்டு இருந்ததாகவும், பாத்திரம் கழுவ பயன்படும் ஸ்கரப்பர் வாயில் திணிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். ஜெயக்குமாரின் கடிதத்தில் அப்பாவு பெயர் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் கண்ணன் கூறினார்.

News May 13, 2024

ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து 32 பேரிடம் விசாரணை

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து 32 பேரிடம் விசாரணை நடைபெறுவதாக தென்மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா எனத் தெரியாததால் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பேசிய கண்ணன், மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருவதாகவும், டிஎன்ஏ உள்ளிட்ட அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்றார்.

error: Content is protected !!