Salem

News September 27, 2024

கூடைப்பந்து போட்டியில் சேலம் மாணவர்கள் அசத்தல் வெற்றி

image

வேலூரில் உள்ள ஸ்ரீஷ்டி வித்யாஸ்ரமம் மேல்நிலைப்பள்ளியில் ‘CBSE CLUSTERS’ என்ற பெயரில் நடந்த ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சேலம் எருமாப்பாளையத்தில் அமைந்துள்ள குளூனி வித்யா நிகேதன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி, 3ஆம் இடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

News September 26, 2024

சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், செப்.28ஆம் தேதியும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

News September 26, 2024

சேலம் நீதிமன்றத்தில் ரவுடி கைது

image

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு ஒன்றிற்காக இன்று காலை நேரில் ஆஜராக வந்த கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜானை, காரில் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடித்து குண்டுக்கட்டாக கைது செய்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News September 26, 2024

சிறுத்தை நடமாட்டம் கலெக்டர் நேரில் ஆய்வு

image

சேலம், மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூர் அருகே தின்னப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேற்று (செப்.25) இரவு கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News September 26, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

இன்று (செப்.26) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,537 கன அடியிலிருந்து 3,355 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 98.930 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 63.462 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News September 26, 2024

சேலத்தில் மாவட்ட வனக்குழு கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் மலைப் பிரதேசங்களில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வனக்குழு கூட்டம் வரும் அக்டோபர் 04ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். வனக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து www.malaithalam.com இணையதளத்தில் வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 26, 2024

சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. குழுவாக திருப்பதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய பணம்

image

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரம் சோதனை நடந்தினர். இந்நிலையில் அங்கு கணக்கில் வராத 1 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் மீனா குமாரி ஜெயபிரகாஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 26, 2024

பதக்கங்களைக் குவித்து அசத்திய சிபிஎஸ்இ மாணவர்கள்

image

2024-25ஆம் ஆண்டிற்கான மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில், சேலம் உடையாப்பட்டியில் அமைந்துள்ள கைலாஷ் மான்சரோவர் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் செயலாளர் ராஜவிநாயகம், முதல்வர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர்.

News September 25, 2024

ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் வாபஸ்

image

தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வு திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, நாளை மறுதினம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தனர். இன்று ஊரக வளர்ச்சித்துறை இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக, சங்க நிர்வாகிகள் ஜான் போஸ்கோ பிரகாஷ், வேல்முருகன், மகேஸ்வரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!