India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட்டதையெட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி செல்வராஜ் உள்ளிட்ட நீர்வளத்துறை வருவாய்த்துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை வரும் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆலோசனை மேற்கொண்டார். இவ்விழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துறை சார்ந்து ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர், தா.பழூரை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் செங்கமுத்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவில், ” அரியலூர் மாவட்டத்தில் உள்ள 18 காவல் நிலையங்களில் எல்லைகளை மறு வரையறை செய்ய வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளை அதிகபட்சமாக ஐந்து கிலோ மீட்டருக்கு உட்பட்டதாக மாற்றுவதால் பொதுமக்களின் சிரமம் குறையும். காவலர்களும் தங்களது பாதுகாப்பு பணியை நன்றாக செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.
ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருளான லிங்கர் எனும் கனிமத்தை வெட்டி கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் உலகநாதன் மனு அளித்தார். அதில் அமீனாபாத், நல்லாம்பத்தை, காட்டுபிரிங்கியம், அருங்கால், கிராமங்களில் அதிக அளவு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அரியலூரில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை காரைக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துக்குமார் தனது வலைதளத்தில் பதிவிட்டு திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்ட அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி ராதிகா புகார் அளித்தார். புகாரின் பேரில் அவதூறு பரப்பிய முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை அருகே ஆர் எஸ் மாத்தூரில் திமுக ஆட்சியில் மின்சாரம் கட்டண உயர்வு, நியாய விலை கடையில் பருப்பு பாமாயில் நிறுத்த முயற்சிப்பதையும் தமிழ்நாடு போதைப்பொருள் கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக அரசு ராஜினாமா செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நாளை மாத்தூரில் நடைபெற உள்ளது. அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் வேளாண்மை அடுக்குத் திட்டம் உருவாக்கபட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், போட்டோ, வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவை கிரைன்ஸ் என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் . இது ஒற்றை சாளர முறையில் செயல்படுவதால் விவசாயிகள் 13 துறை திட்டங்களுக்கும், ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3381 மெ.டன் யூரியா, 976 மெ.டன் டி.ஏ.பி, 625 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 3329 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.