India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட 1,749 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், 1,085 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மன்சூர் அலி கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக அதன் தலைவர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் அவர் குற்ற வழக்குகள் தொடர்பான விவரத்தை மறைத்துள்ளார் எனக்கூறி சென்னையை சேர்ந்த பாரி என்பவர் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிதம்பரத்தில் நான் போட்டியிட்டால் திருமாவளவன் வெற்றி பெற முடியாது என்பதால் பாஜக என்னை நிற்க விடவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய தடா பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சிதம்பரம் தொகுதியில் என்னை கேட்காமல் கார்த்திகாயினிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும் புகார் கூறியுள்ளார்.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடிந்ததா? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதல்வர் ஸ்டாலின் பரப்பி வருவதாக சாடினார். மேலும், திமுக தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதல்வரே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உரிமையை பெற்று தந்துவிட்டு பாமகவுக்கு முதல்வர் பாடம் எடுக்கலாம் என ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பிற சமூகங்களின் பிரச்னைகளை ஓடோடி கேட்டு நிறைவேற்றும் முதல்வர், வன்னிய சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறார். முதல்வர் நினைத்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீடு எப்போதோ நிறைவேற்றப்பட்டிருக்கும். அரசியல் காரணமாக திமுக இதில் அலட்சியம் காட்டுகிறது” என்றார்.

கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். இந்திய அணி சார்பில் 20 ஓவர் போட்டிகளில் புதிதாக களமிறங்கியுள்ள ரிங்கு சிங், அதிரடியாக கலக்கி வருகிறார். அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா அணி சார்பில் விளையாடி வருகிறார். நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கோலியை அவர் சந்தித்தார். அப்போது அவருக்கு கோலி, ஒரு பேட்டை பரிசாக வழங்கினார்.

விசிக என்றால் விழுப்புரம், சிதம்பரம் பகுதி கட்சி என அண்ணாமலை விமர்சித்துள்ளார். சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகாயினியை ஆதரித்து பேசிய அவர், “விசிகவுக்கு பொதுத் தொகுதி தரவில்லை என்றால் தீக்குளிப்போம் அக்கட்சி நிர்வாகிகள் கூறினார்கள். இப்போது திமுக பொதுத்தொகுதியை கொடுத்துவிட்டதா? வாயை திறந்தால் திருமாவளவன் பொய் பேசுகிறார். அவரின் பொய் இந்தமுறை சிதம்பரத்தில் எடுபடாது” எனக் கூறினார்.

விசாக்களுக்கான கட்டணத்தை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது. வெளிநாட்டினரை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த வழிவகுக்கும் எச்.1பி விசா படிவ கட்டணம் ரூ.38,000ல் இருந்து ரூ.64,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கான இபி-5 விசா கட்டணம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், எல்.1 விசா கட்டணம் ரூ.38,000ல் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் திருப்பூரில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட சந்திரசேகர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும், தலைமை மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக கூறினார். கரும்பு விவசாயி சின்னத்திற்காக நாதக எவ்வளவோ முயன்றும் அச்சின்னத்தை பெற முடியாமல் மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.

காங்கிரசுக்கு மேலும் 2 நோட்டீஸ்கள் வருமான வரித்துறையால் அனுப்பப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அக்கட்சிக்கு ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில், “வருமான வரித்துறை நேற்றிரவு மேலும் 2 நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது. இது வரி தீவிரவாதம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.