news

News April 26, 2024

வாக்குச்சீட்டுக்கு மாறும் கோரிக்கை நிராகரிப்பு

image

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்த நீதிமன்றம், தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அனைத்து வித விசாரணைகளையும் நடத்தியதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து, விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News April 26, 2024

உலகக் கோப்பை குறித்து யோசிக்கவில்லை

image

தனது கவனம் ஐபிஎல்லில் மட்டும் தான் இருப்பதாக என குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம் எனவும், தற்போது உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால் அது குஜராத் அணிக்கு அநீதி இழைப்பது போன்றது எனவும் தெரிவித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் 900 ரன்களுக்கு மேல் குவித்த அவர், ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பிடித்தார்.

News April 26, 2024

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

image

மனித உரிமை மீறல் தொடர்பான அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் அறிக்கையில், மணிப்பூரில் கொலைகளும், மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளதாகவும், பிற பகுதிகளில் செய்தியாளர்கள், சிறுபான்மையினர் தாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது, புரிதலின்றி வெளியிடப்பட்ட அறிக்கை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டித்துள்ளது.

News April 26, 2024

கார்களுக்கு போலி ஏர் பேக் தயாரித்த ஆலைக்கு சீல்

image

சென்னையில் கார்களுக்கு போலி ஏர் பேக் தயாரிக்கும் ஆலையை கண்டுபிடித்து சீல் வைத்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தரமான ஏர் பேக் விலை ₹1 லட்சமாக இருக்கும்போது, அதை போலியாக தயாரித்து ₹27,000க்கு விற்றதையும், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்ததையும் கண்டுபிடித்தனர். ₹2 கோடி மதிப்பிலான 921 ஏர் பேக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News April 26, 2024

தமிழக அமைச்சர்கள் கைதாகலாம்: எச்.ராஜா

image

டெல்லி, ஹைதராபாத்தை அடுத்து சாராய ஊழல் வழக்கு, ஜீன் 4ஆம் தேதிக்குப் பிறகு சென்னைக்கும் வரும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, தமிழகத்தில் சாராயம் உற்பத்தி செய்யும் அதிபர்கள், அமைச்சர்கள் அனைவரும் பிறகு சிறைக்குச் செல்வர்” என்றார். மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால், KCR கவிதா ஆகியோர் கைதானது கவனிக்கத்தக்கது.

News April 26, 2024

12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை

image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்திருப்பதால், சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நீர்மட்டம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 102 அடியாக இருந்தநிலையில், தற்போது 54.32 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோயில், நந்தி சிலை வெளியே தெரிகின்றன. பருவமழை முன்கூட்டி தொடங்கினால் மட்டுமே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலும்.

News April 26, 2024

ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பு குறைந்தது

image

ஹெல்மெட் அணிவதால் பைக் விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. 2021இல் சென்னையில் 279ஆக இருந்த பலி எண்ணிக்கை, 2022இல் 210, 2023இல் 196ஆகக் குறைந்துள்ளது. உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களுக்கும் ஹெல்மெட் விதியை தீவிரமாக அமல்படுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.

News April 26, 2024

ஏவுகணையை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

image

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1792ஆம் ஆண்டில் நடந்த ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் ராக்கெட்டுகளை வீசி திப்புசுல்தானின் படையினர் தாக்குதல் நடத்தினர். இதுவே உலகின் முதல் ஏவுகணையாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது பயன்படுத்தப்படும் நவீன கால ஏவுகணை, 2ஆம் உலக போரில் நாஜிக்கள் ஆட்சியின்போது ஜெர்மனி கண்டுபிடித்தது. V1, V2 ஏவுகணைகளை உருவாக்கி, இங்கிலாந்து மீது ஜெர்மனி படை தாக்குதல் நடத்தியது.

News April 26, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை ₹360 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 அதிகரித்து ₹54,040க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,755க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹88க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹88,000க்கும் விற்பனையாகிறது.

News April 26, 2024

காஷ்மீர் குறித்த கருத்துக்கு ஈரானிடம் இந்தியா கவலை

image

காஷ்மீர் குறித்து ஈரான்-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு ஈரானிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் பாகிஸ்தானுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் செய்தபோது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் பிரச்னைக்கு அப்பகுதி மக்கள் விருப்பப்படியும், சர்வதேச சட்டப்படியும் அமைதி வழியில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு ஈரானிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!