news

News April 29, 2024

ஜாக்சனின் பயோ பிக் படத்தை இயக்க விரும்பும் சந்தீப்

image

சர்ச்சைக்குப் பெயர் பெற்ற அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது கனவு ப்ராஜெக்ட் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகரான சந்தீப் ரெட்டிக்கு, ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க வேண்டும் என்பதுதான் கனவாம். ஜாக்சனாக நடிக்க நடிகரும், தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால், ஹாலிவுட் சென்றுவிடுவேன் எனக் கூறுகிறார்.

News April 29, 2024

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் குறித்து இன்று அறிவிப்பு?

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6ஆவது கட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. இதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இல்லையென்றால், 7ஆவது கட்ட அறிவிப்பாணையில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும். சமீபத்தில், திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

News April 29, 2024

அமித் ஷா வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு

image

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதைப் போன்ற போலி வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இணையத்தில் பரவும் போலி வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, குற்றவாளியைத் தேடி வருகிறது.

News April 29, 2024

உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும் ஆரஞ்சு டீ

image

க்ரீன் டீயுடன் ஒப்பிடும் போது ஆரஞ்சு டீ ஆறு மடங்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆரஞ்சு டீயை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரூற்றி 1 – 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உமிழ்நீர் சுரப்பதை அதிகரிப்பதோடு ஜீரண சக்தியும் மேம்படுமாம்.

News April 29, 2024

இன்று கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்

image

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று அவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க செல்கிறார். தொடர்ந்து, மே 4-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. இதையொட்டி, அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

உச்சநீதிமன்றத்தை நாடினார் ராஜேஷ் தாஸ்

image

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021இல் பதியப்பட்ட வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

News April 29, 2024

நீட் பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கியது

image

பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் பயிற்சி வகுப்புகள், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 9.15am முதல் 4.30pm வரை செயல்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில், காலை சிற்றுண்டி, தேநீா், மதிய உணவு வழங்கப்படும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு, மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கு 13,200 தமிழக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

News April 29, 2024

SRH-ஐ பதம் பார்த்த CSK பவுலர்கள்

image

SRH-க்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் CSK கலக்கியது. ருதுராஜ் தனது மிரட்டல் அடி மூலம், வருங்கால இந்திய அணியின் எதிர்காலம் என்பதை நிரூபித்தார். ஹெட், அபிஷேக், மார்க்ராம், நிதிஷ் ரெட்டி என பேட்டிங்கில் வலுவாக இருக்கும் SRH-ஐ CSK பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்தனர். குறிப்பாக, தேஷ்பாண்டே 2வது ஓவரில் 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

News April 29, 2024

பணியின்போது போலீசார் செல்ஃபி எடுக்கக்கூடாது

image

பணியின்போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, பணி நேரத்தில் போலீசார் (SIக்கு கீழ் ரேங்கில் உள்ளவர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்த இவர், தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன், முக்கிய பிரமுகர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 29, 2024

ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு

image

கர்நாடகாவின் சாமராஜநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹனூர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாக்கு இயந்திரங்கள் சூறையாடப்பட்டன. இதனால், இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!