news

News May 1, 2024

கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து

image

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

News May 1, 2024

காங்கிரஸைப் பற்றி பேச பிரதமருக்கு அருகதை இல்லை

image

காங்கிரஸைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், “பிரதமர் மோடி, நாட்டின் 45% சொத்துக்களை 20, 25 தொழிலதிபர்களுக்கு கொடுத்து, அதற்கு பிரதிபலனாக ₹8,000 கோடியை தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்றவர். அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிக்கும் என்று கூறுவது விந்தையாக இருக்கிறது” என்றார்.

News May 1, 2024

கச்சா எண்ணெய்க்கான Windfall வரி குறைப்பு

image

கச்சா எண்ணெய் மீதான Windfall வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. எதிர்பாராத அதிகப்படியான லாபம் மீது விதிக்கப்படும் இந்த வரி, கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ₹9,600இல் இருந்து ₹8,400ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், வணிக கேஸ் சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. முன்னதாக, கடந்த மாதம் ₹6,800ஆக இருந்த Windfall வரி ₹9,600ஆக உயர்த்தப்பட்டது.

News May 1, 2024

பிளே-ஆப் சுற்றுக்கு DC அணி தகுதி பெறும்

image

நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 6இல் தோல்வியைச் சந்தித்த DC அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய DC அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ், “இப்போது கூட இப் போட்டியில் எங்களது தலைவிதி எங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது, எஞ்சிய 3 ஆட்டங்களில் வென்றால் போதும், 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்” எனத் தெரிவித்தார்.

News May 1, 2024

ஒரே நாளில் வெயிலும், மழையும் எச்சரிக்கை

image

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை மற்றும் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சம்மன்

image

பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வாலுக்கும், அவரது தந்தை ரேவண்ணாவுக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வால் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்ய கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது. பிரஜ்வால் தற்போது ஜெர்மனியில் உள்ளதால் அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

News May 1, 2024

கால இடைவெளி கவலை அளிக்கிறது

image

மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 18 மாதங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கெஜ்ரிவால் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மக்களவைத் தேர்தல் நேரத்தில் அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி, இந்த கால இடைவெளி கவலை அளிப்பதாகத் தெரிவித்தனர்.

News May 1, 2024

உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழகம்

image

கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு நாடும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். என்றாவது ஒருநாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கர்நாடகா கூறியுள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்றே கூறும் என சாடினார். தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என ஒழுங்காற்றுக் குழுவிடம் கர்நாடகா நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

ஏப்ரலில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவு

image

தென்னிந்தியாவில், 51 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது. அதாவது, மார்ச்சில் தென்னிந்தியாவின் அதிகபட்ச வெயிலின் சராசரி 37.2 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 2016 ஏப்ரலில் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவான நிலையில், தற்போது 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை ஆலப்புழாவில் வாழ்நாள் உச்சமாக 38.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.

News May 1, 2024

ஆந்திராவில் பாஜக கூட்டணியில் விரிசல்

image

மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கும் ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக -ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நேற்று தெ.தேசம், ஜனசேனா கட்சிகள் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பாஜக பொறுப்பாளர் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்துவிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகளில் உடன்பாடு இல்லாததால் பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!