news

News May 7, 2024

‘பைசன்’ வாழ்க்கை வரலாறு படமா?

image

மாரிசெல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘பைசன்’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பை நெல்லை மற்றும் சென்னையில் 60 நாள்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். அத்துடன், இப்படத்தின் கதைக்களம் முழுக்க கபடியைச் சுற்றி நடக்கும் என்று கூறிய அவர், யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல, கற்பனைக் கதையே எனவும் தெரிவித்தார்.

News May 7, 2024

பழைய சோற்றின் மகத்துவம்

image

கோடை கால உடல் சூட்டை தணிக்க, காலம் காலமாக நமது முன்னோர்கள் சாப்பிட்டு வந்த பழைய சோறு நல்ல பயன் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை வேளையில் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் 80 சதவீத குடல் நோய்களைக் குணப்படுத்த முடியும் எனக் கூறுகிறார்கள். பழைய சோற்றில் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், அதில் ஏராளமான வைட்டமின் சத்துகளும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

News May 7, 2024

+2 தேர்வு முடிவு: 2 மாணவிகள் தற்கொலை

image

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், 2 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற சவுமியா என்ற மாணவி, +2 தேர்வில் வெற்றிபெற்றும், எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லை என தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதேபோல், விருத்தாசலம் அருகே கணித பாடத்தில் தோல்வியடைந்த அபிநயா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

News May 7, 2024

துவண்டுவிட வேண்டாம் மாணவர்களே

image

ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் செய்தியுடன் மாணவர்களின் தற்கொலை செய்தியும் வெளியாகிறது. உயிரை விட மதிப்பெண்களே முக்கியம் என்ற மாணவர்களின் நினைப்பே இத்தகைய செயலை செய்யத் தூண்டுகிறது. வாழ்க்கையின் வெற்றி மதிப்பெண்களை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதில்லை மாணவர்களே. அதனை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். பெற்றோரும் ஆசிரியர்களும் இதனை எடுத்து சொல்வதும் அவசியம்.

News May 7, 2024

காங்கிரசுக்கு பாகிஸ்தான் ஆதரவு

image

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிநாட்டு சக்திகளால் தீர்மானிக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு கிடைப்பதாகத் தாக்குதல் தொடுத்தார். தோல்வி பயத்தில் ராகுல் காந்தி ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு ஓடுவதாக விமர்சித்த அவர், ரேபரேலியிலும் ராகுல் தோற்பது உறுதி என சூளுரைத்தார்.

News May 7, 2024

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் நிறுத்தம்

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து 3ஆவது முறையாக இன்று காலை அவர் விண்வெளிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், அவர் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பு அவரது பயணம் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

News May 7, 2024

சிறுமிக்கு அப்போலோவில் அறுவை சிகிச்சை

image

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த 5 வயது சிறுமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் தலையின் மேல்பகுதி 15 அங்குலம் அளவிற்கு பெயர்ந்துள்ளதாகவும், அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

News May 7, 2024

புள்ளிப் பட்டியலில் குஜராத்தை பின்னுக்கு தள்ளிய மும்பை

image

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த MI, நேற்று SRH-ஐ வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறியுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள MI, 4 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இருப்பினும் அந்த அணிக்கு ப்ளே ஆஃப்-க்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல், GT 11 போட்டிகளில் 4இல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

News May 7, 2024

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடு சரிவு

image

தேசிய பங்குச்சந்தையான NSEஇல் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPI) விகிதம், 11 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. மார்ச் 2024 நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களின் 17.68% பங்குகள் FPI வசம் உள்ளது. இது அதிகபட்சமாக டிசம்பர் 2020இல் 21.21%ஆக இருந்தது. அதேநேரம், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு கணிசமாக உயர்ந்து 16.05%ஆக அதிகரித்துள்ளது.

News May 7, 2024

இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

image

நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்வோர் கட்டாயம் இ-பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனைச் சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி செல்வதற்காக இதுவரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!