news

News July 29, 2024

செந்தில்பாலாஜி காவல் 50ஆவது முறையாக நீட்டிப்பு

image

செந்தில்பாலாஜியின் நீதிமன்றக்காவலை 50ஆவது முறையாக நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் அவர், உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரினார். ஆனால், தற்போதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது காவலை நீதிபதி அல்லி நீட்டித்து உத்தரவிட்டார்.

News July 29, 2024

மகளுக்காக புகைப் பிடிப்பதை நிறுத்திய நடிகர்

image

தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படித்தான் தனது மகள் ரஹா கபூருக்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளார். தான் 17 வயதிலிருந்தே புகைப் பிடித்து வந்ததாகவும், தனது மகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக, புகைப்பதை நிறுத்தியதாக கூறியுள்ளார். மேலும், மகளுக்காக, ஆரோக்கியமான தந்தையாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News July 29, 2024

மகாராஷ்டிரா காட்டில் மீட்கப்பட்டது தமிழ் பெண்ணா?

image

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்ட வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 50 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார். அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும், அவரிடம் காலாவதியான அமெரிக்க விசா மற்றும் தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News July 29, 2024

பங்குச்சந்தைகள் புதிய உச்சம்

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. நேற்று 24,835 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்த தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, இன்று மதியம் 12 மணியளவில் 153 புள்ளிகள் உயர்ந்து 24,988 புள்ளிகளை தொட்டது. நிஃப்டி இன்றே 25,000 புள்ளிகளை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின் மளமளவென சரிந்து மீண்டும் 24,836 புள்ளிகளுக்கு வந்தது.

News July 29, 2024

ஜாமின் தள்ளிப்போனதால் கெஜ்ரிவால் ஏமாற்றம்

image

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கிலும் ஜாமின் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முறைகேட்டிற்கு அடிகோலியவர் கெஜ்ரிவால் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

News July 29, 2024

நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்

image

தமிழ் நடிகர்கள், நடிகைகள் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது. பலர் ஏற்கெனவே அட்வான்ஸ் வாங்கிய படங்களில் நடித்து முடிக்காமல், புதிய படங்களுக்கு அட்வான்ஸ் வாங்குவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால், பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்த பின்பே புதிய படங்களுக்கு செல்ல தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

News July 29, 2024

‘டெப்ஃலான் ஃப்ளூ’ நோயை உருவாக்கும் நான்ஸ்டிக் தவா

image

அமெரிக்காவில் ‘டெப்ஃலான் ஃப்ளூ’ என்ற நோய் பரவி வருவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டில் சமைப்பதற்காக பயன்படுத்தும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் இந்த நோய்க்கு காரணமாக அமைவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் 267 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நான்ஸ்டிக் தவாவை அதிக வெப்பத்தில் வைத்து சமைக்கும் போது, அதில் உள்ள ரசாயன பூச்சு ‘டெப்ஃலான் ஃப்ளூ’ காய்ச்சலை உருவாக்குகிறது.

News July 29, 2024

Olympics: பதக்கத்தை தவறவிட்ட இந்தியா

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டுள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் அர்ஜூன் பாபுதா வெற்றியை நெருங்கி வந்து கடைசி நேரத்தில் தோல்வியடைந்துள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜூன் 208.4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

News July 29, 2024

தர்மபுரி கொலையுடன் தொடர்புடைய 4 பேர் கைது

image

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் ஓட்டல் புகுந்து இளைஞரை கொலை செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரியாணி ஓட்டலில் வேலை பார்த்துவந்த முகமது ஆஷிக்கை இரு தினங்களுக்கு முன், 4 இளைஞர்கள் வெட்டவெளியில் வெட்டிக்கொன்றனர். இதில் தற்போது கைதாகியிருக்கும் நான்கு பேர் அளித்த வாக்குமூலத்தின்படி, காதல் விவகாரம் பிடிக்காமல் பெண்ணின் உறவினர்களே காதலனை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News July 29, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பெயர்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!