news

News August 5, 2024

ஈபிள் டவர் முன் பதக்கங்களுடன் மனு பாக்கர்

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர் ஈபிள் டவர் முன்பாக எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பகிர்ந்துவரும் ரசிகர்கள் ‘பிச்சர் ஆஃப் தி டே’ என கமெண்ட் செய்து வருகின்றனர். 2024 ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், மனு பாக்கர் 2 பதக்கங்களை வென்றுள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் அவரது பெயர் ஒலிக்கிறது.

News August 5, 2024

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்: மம்தா

image

வங்கதேச கலவரம் தொடர்பாக மேற்குவங்க மக்கள், நிதானத்தை கடைபிடிக்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற அவர், இந்த விவகாரத்தில் 2 நாடுகள் சம்பந்தப்பட்டதால் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியம் எனக் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

காலிறுதியில் இந்திய வீராங்கனை நிஷா தாஹியா

image

பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை, நிஷா தாஹியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தையை சுற்றில் உக்ரைன் வீராங்கனை டெடியானா சோவாவை
நிஷா எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-6 என்ற புள்ளி கணக்கில் சோவாவை வீழ்த்தி நிஷா தாஹியா வெற்றி பெற்றார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகூறி வருகின்றனர்.

News August 5, 2024

வயநாடு நிலச்சரிவு பலி 400ஆக உயர்ந்தது

image

வயநாடு நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், சூரல்மலை, முண்டக்கை உள்பட 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 400 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உதவிக்கு 04936 204151, 95268 04154, 80784 09770 என்ற எண்களில் அழைக்கவும்.

News August 5, 2024

அமைச்சர் ஜெய்சங்கருடன் ராகுல் காந்தி சந்திப்பு

image

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். வங்கதேச விவகாரம் தொடர்பாகவும், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்துள்ளதை பற்றியும் ராகுல் காந்தி, அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து வங்கதேச நிலைமை தொடர்பாக பிரதமர் மோடியுடன், ஜெய்சங்கர் விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

News August 5, 2024

ஈரான் மசூதியில் சிகப்பு கொடி.. இதுதான் அர்த்தமா?

image

ஈரானில் ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலையை இஸ்ரேல் அரங்கேற்றி இருக்கும் எனக் கருதும் ஈரான், இதற்கு விரைவில் பழிதீர்க்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், பழிவாங்கலை பிரகடனப்படுத்தும் விதமாக ஈரானில் உள்ள மசூதியில் சிகப்புக் கொடி இன்று ஏற்றப்பட்டது. இதையடுத்து, ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருகிறது.

News August 5, 2024

லக்‌ஷயா சென் போராடி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் தோல்வியை தழுவினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில், மலேசிய வீரரை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்‌ஷாயா கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்களையும் மலேசிய வீரர் கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால், லக்‌ஷயா சென் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

News August 5, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

News August 5, 2024

பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

image

பிரதமர் மோடியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் கலவரமான சூழலில், ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், அண்டை நாட்டு நிலவரம், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 5, 2024

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஸ்கீட் கலப்பு பிரிவில் நடைபெற்ற போட்டியில் சீனாவை, இந்திய அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சீனாவிடம் 44-43 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்தியாவுக்கான வெண்கல பதக்க வாய்ப்பு கவனாகிப்போனது.

error: Content is protected !!