India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை விடுமுறைக்கு பின், வழக்கமாக ஜூன் 1 (அ) 2ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும். இந்த ஆண்டு வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெற உள்ளதால், பள்ளிகள் திறப்பு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. மே 25க்கு பிறகு, வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுவதால், பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால், ஜூன் 10இல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பிஹாரின் சரண் தொகுதியில் 5ஆவது கட்ட வாக்குப்பதிவின் போது, பாஜக மற்றும் ஆர்ஜேடி தொண்டர்கள் மத்தியில் மோதல் வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அத்தொகுதியின் ஆர்ஜேடி வேட்பாளரும், லாலு பிரசாத்தின் மகளுமான ரோகினி ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது, இரு தரப்பும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

மோடி இன்னும் சில நாள்களில் முன்னாள் பிரதமராக மாறி விடுவார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மோடிக்கு உதவுவதற்காக தேர்தல் பல கட்டமாக நடத்தப்படுவதாகவும், கடந்த 2 மாதங்களாக நாட்டில் பிரசாரத்தை தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். வெப்பமான சூழலிலும் தேர்தல் ஆணையம் பல கட்ட தேர்தலை நடத்துவதாக அவர் விமர்சித்தார்.

பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலரை விசாரிக்க நெல்லை எஸ்.பி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் சென்னை ஆயுதப்படையில் வேலை செய்யும் விருதுநகரைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி எனத் தெரியவந்தது. இந்நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியபோது திடீரென மயங்கி விழுந்ததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசியில் 150க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வெடி விபத்து நடப்பதால் சிவகாசியில் உள்ள ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களது நடவடிக்கையை கண்டித்து வேலை நிறுத்தம் செய்வதாக தமிழன் பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

டெல்லியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் INDIA கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொருட்டு, அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் (ஜூன் 3) இந்த விழா நடப்பதால், இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு, ஜூன் 2ஆவது வாரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் முதல் பாடலான “அடங்காத அசுரன்…” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் “வாட்டர் பாக்கெட்…” பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல், கானா பாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ஜூன் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னை காயப்படுத்த எனது பெற்றோரை துன்புறுத்த வேண்டாம் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிக்க கெஜ்ரிவாலின் பெற்றோருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய கெஜ்ரிவால், “உங்கள் சண்டை என்னோடுதான், எனது பெற்றோரை விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அணை தொடர்பான எந்த தகவலையும் தமிழக அரசிடம் அளிக்கவில்லை என்றும், பிரச்னை தீரும் வரை தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இரு மாநிலங்களுக்கு இடையேயான உண்மையான தோழமை உணர்வை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இரவிலும் கனமழை தொடர்வதால் மக்கள் கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.