News April 30, 2024

சாம்பியன் பட்டம் வென்ற வேலவன்

image

பிரான்ஸ் பேட்ச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், பிரான்ஸின் மெல்விலுடன் மோதினார். 35 நிமிடங்கள் நீடித்த போட்டியில், 3-0 என்ற செட் கணக்கில் வென்ற வேலவன், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது அவரது 8ஆவது சர்வதேச பட்டமாகும்.

News April 30, 2024

அடுத்த சீசனில் அஷ்வின் விற்கப்படாமல் போகலாம்

image

RR அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அஸ்வினின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரர் சேவாக் கவலை தெரிவித்துள்ளார். விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டுமென முனைப்புடன் அஷ்வின் பந்து வீசுவதில்லை என்று கூறிய சேவாக், அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது எனக் கூறினார்.

News April 30, 2024

4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

image

ஆந்திரா (ராயலசீமா), பிஹார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்த 5 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்றும், நாளையும் வெயில் அதிகரித்தே காணப்படும் என்றும், மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று 15 இடங்களில் 37.7°C தாண்டி வெயில் கொளுத்தியது.

News April 30, 2024

விரைவில் புதிய மின்சார வாகனக் கொள்கை

image

மின்சார வாகனங்களுக்கான வழிகாட்டுதல்கள், அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக மேம்படுத்தும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மின் வாகன இறக்குமதியைக் குறைத்து, 3 ஆண்டுகளில் மொத்த உற்பத்தியில் 25 சதவீதமும், 5 ஆண்டுகளில் 50 சதவீதமாகவும் உயர்த்த கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 30, 2024

மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள்

image

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென, மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தால், அதனை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

image

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% நீர் இருப்பு உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் சூழலில், 7 டிஎம்சி குடிநீர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

கட்சியிலிருந்து பிரஜ்வால் இன்று நீக்கம்

image

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் அக்கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் அவர் நீக்கப்பட உள்ளார்.

News April 30, 2024

வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ

image

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை அவர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

News April 30, 2024

நிர்மலா தேவி தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

image

மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது. இவ்வழக்கில், நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா தேவி தரப்பில் இன்றும் வாதாட அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

ஓலாவில் 10% ஊழியர்கள் பணி நீக்கம்?

image

முன்னணி கார் டாக்ஸி நிறுவனமான ஓலா கேப்ஸ், அதன் 10% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 200 பேர் வேலை இழப்பார்கள் எனத் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த அந்நிறுவனம், திறனை மேம்படுத்த மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவையற்ற பணிகளை நீக்கி, புதிய பணிகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!