News April 30, 2024

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது!

image

தேனி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்னமனூரில் உள்ள கம்மவார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பையும் மீறி, ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் நுழைய முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக TTV தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

இந்தியாவில் சம்பளம் அதிகரிக்கவில்லை

image

இந்தியாவின் உண்மையான வளர்ச்சி 6 – 6.5% வரை இருக்கலாம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வளர்ச்சி 8 – 8.5%ஆக இருக்காது எனத் தெரிவித்த அவர், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற 9 – 10% வளர்ச்சி அவசியம் என்றார். நாட்டில் வளர்ச்சி இருக்கும்போது, வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அவை அதிகரிக்கவில்லை என அவர் தெரித்தார்.

News April 30, 2024

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது!

image

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 95ஆவது கூட்டம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழக அரசின் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கவுள்ளார். ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, கடந்த பிப்.1 – ஏப்ரல் 29 வரை 7.3 டிஎம்சி நீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 2.3 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

News April 30, 2024

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர், கண்கோர் மாவட்ட எல்லைப் பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்புப் படையினர், நக்சலைட்கள் இடையே தாக்குதல் நடந்த நிலையில், 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் 87 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 150 பேர் வரை சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

புதிய போஸ்டரை வெளியிட்ட ‘வணங்கான்’ படக்குழு!

image

அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பாலா தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படத்தில், மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னர், இந்தப் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில், ஒருசில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

News April 30, 2024

பிரஜ்வால் விவகாரத்தில் நடவடிக்கை தேவை

image

எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்ப்பதாகவும், இதுபோன்ற வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வால் போட்டியிடும் நிலையில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News April 30, 2024

பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்

image

பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும், கர்நாடக எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால், பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News April 30, 2024

ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் டிஸ்பிளே கோளாறு

image

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி தொலைக்காட்சியில் டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமரா காட்சிகள் 10 நிமிடங்களுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, அங்கு உடனடியாக வந்த அதிகாரிகள், அப்பிரச்னையை சரி செய்தனர். தற்போது ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி காட்சிகள் சீராக ஒளிபரப்பாகிறது.

News April 30, 2024

உங்களைதான் மோடி இயக்குகிறார்

image

காங்கிரசை சந்திரபாபு நாயுடு ரிமோட் மூலம் இயக்குவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, ஜெகன் மோகன் ரெட்டியைதான் பிரதமர் மோடி இயக்குகிறார் என பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜெகன் மோகன் கங்காவரம் துறைமுகத்தை அதானிக்கு வழங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

News April 30, 2024

₹4 கோடி பறிமுதல்.. சிபிசிஐடி சம்மன்

image

சென்னையில் ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைதான 2 பேரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவ இடமான தாம்பரம் ரயில் நிலையம், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!