News April 17, 2024

அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும்

image

அனைவரும் வாக்குப்பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமக்கான இயக்கம், நமக்கான ஆட்சி எது என சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். தமிழ்நாட்டின் கோரிக்கை, உரிமைகளை வென்றெடுக்க முழு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். எனவே, அதிமுகவின் இரட்டை இலை, கூட்டணி கட்சி வேட்பாளர்களின் சின்னங்களை தேடிப் பார்த்து வாக்களிக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறினார்.

News April 17, 2024

தேர்தலுக்குப் பின்பு மெகா திட்டங்கள்

image

மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு 100 நாள்களுக்கான திட்டங்களுடன் இந்திய ரயில்வே தயாராக உள்ளது. அதில், ரயில் பயணிகளுக்கு ‘பீமா யோஜனா’ இன்சூரன்ஸ் திட்டம், 24 மணிநேரத்தில் ரீபண்ட், பயணச்சீட்டு முன்பதிவுக்குப் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பிரத்யேகச் செயலி, படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் ஆகியவை அடங்கும். தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் புதிய அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.

News April 17, 2024

உலகக் கோப்பையில் கவனம் செலுத்தும் இந்திய அணி

image

டி20 உலகக் கோப்பைத் தொடரில், ரோஹித் – கோலி ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ரோஹித், டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு ஐபிஎல் தொடரில் பாண்டியா பந்துவீச்சில் கவனம் செலுத்துதல், ஷுப்மன் கில்லை பேக்கப் ஒப்பனராக்குதல், ரியான் பராக்கை அணியில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது.

News April 17, 2024

பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது

image

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்திக்குமென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். உ.பி., காசியாபாத்தில் பேட்டியளித்த அவர், 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது என்றார். மேலும், பிரதமர் மோடி ஊழலின் தலைவராக இருக்கிறார். பாஜக ஊழல்வாதிகளை மட்டுமின்றி, ஊழல் பணத்தையும் வைத்துள்ளது என்று விமர்சித்த ராகுல், உ.பியில் I.N.D.I.A கூட்டணி அதிக இடங்களில் வெல்லுமென நம்பிக்கை தெரிவித்தார்.

News April 17, 2024

பாஜக, அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் : கனிமொழி

image

மக்களவைத் தேர்தலில் மோடிக்கும், பாஜகவுக்கும் சரியான பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனக் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நியாயமாக வழங்க வேண்டிய நிதியைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆதிக்கச் சக்திகளை கொண்டுவர வேண்டும் என பாஜக துடிக்கிறது. அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனக் கூறிய அவர், கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுகவிற்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

News April 17, 2024

மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு தருவதில்லை

image

மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியை பாஜக அரசு முழுமையாகத் தருவதில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்கள் எதையும் தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாகத் தரவில்லை என்றும், இயற்கைச் சீற்றங்களின் போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை எனவும் சாடினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

News April 17, 2024

வெளியூர் ஆட்கள் இன்று மாலை வெளியேற உத்தரவு

image

தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அப்போது முதல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதனால், பிரசார நேரம் நிறைவடைந்ததும் தொகுதி சாராத ஆட்கள் வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வெளிநபர்கள் தங்கவில்லை என்பதை விடுதி நிர்வாகிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 17, 2024

இந்த விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை

image

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதையே விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாட இந்தியா தயங்காதென கூறியிருந்தார். இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “நான் முன்பே கூறியது போல், இதில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை” என்றார்.

News April 17, 2024

உலகக் கோப்பை வாய்ப்பைத் தவறவிடும் அஷ்வின்?

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், அஷ்வின் இடம்பிடிப்பது சந்தேகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்ற அவர், ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் எடுத்த அவர், அதன் பிறகு நடந்த 5 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால் அவரது உலகக் கோப்பை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

News April 17, 2024

IPL சாதனை: சதம் + கேட்ச் + விக்கெட்

image

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சுனில் நரைன் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், தனது முதல் ஐபிஎல் சதத்தை 109(56) பதிவு செய்தார். அத்துடன், சஞ்சு சாம்சனின் கேட்சைப் பிடித்ததோடு, அபாரமாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் ஒரு ஐபிஎல் போட்டியில், சதம் + கேட்ச் + விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

error: Content is protected !!