Vellore

News March 13, 2025

பிளஸ்-1 தேர்வில் 308 பேர் ஆப்சென்ட்

image

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது‌. இந்த தேர்வை 80 மையங்களில் மொத்தம் 6,913 மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இதில் இன்று (மார்ச் 13) கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பாலிடிக்ஸ் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது. இன்றைய தேர்வில் 6,913 பேரில் 308 பேர் ஆப்சென்ட் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 13, 2025

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 13) அதிகபட்சமாக 101.4°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் 2 வது முறையாக வெயில் சதமடித்துள்ளது.

News March 13, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மாநில அளவிலான மஞ்சப்பை விருது மற்றும் மாவட்ட அளவிலான பசுமை முதன்மையாளர் விருது பெற https://tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

காட்பாடி அரசு பள்ளி மாணவி முதலிடம்

image

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷினி ஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார். ஒற்றையர் பிரிவில் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 1585 புள்ளிகள் பெற்று ஆதர்ஷினி ஸ்ரீ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 13, 2025

வேலூர் மாவட்டத்தில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

image

வேலூரில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகள் பிடிஓ பூம்பா வேலூர் வளர்ச்சி ஊராட்சிகள் பிடிஓ.,வாகவும், இங்கு பணியில் இருந்த சசிகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இங்கு பணியில் இருந்த சத்தியமூர்த்தி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 13, 2025

சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த விஐடி பல்கலை

image

சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை க்யூ.எஸ். எனும் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பொறியியல், தொழில்நுட்பத்தில் உலக அளவில் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 142-வது இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டைவிட 70 இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேசிய அளவில் விஐடி பல்கலைக்கழகம் 9-வது இடம் பிடித்துள்ளது.

News March 13, 2025

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியர்

image

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திறந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் <>தேதிக்குள் <<>>விண்ணப்பியுங்கள்.

News March 13, 2025

மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

image

குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் பகுதியில் உள்ள பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (24) நேற்று (மார்ச்.12) மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது வண்டியின் சக்கரம் அவர் மீது ஏறியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் குடியாத்தம் கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

17 வயது சிறுமி கர்ப்பம்; கட்டிட மேஸ்திரி மீது வழக்கு பதிவு

image

வேலூர் அப்துல்லாபுரம் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சீனிவாசன் (21) என்பவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சிறுமி வயிற்று வலி ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அப்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!