Ranipet

News June 19, 2024

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

image

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எம்எல்ஏ ரவி பேசுகையில், “அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தலா 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அரக்கோணத்தை தரம் உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்” என்றார். மேலும், இந்த ஆய்வின் போது தலைமை மருத்துவர் நிவேதிதா மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

News June 19, 2024

ராணிப்பேட்டை பகுதிகளில் மின் நிறுத்தம்

image

ராணிப்பேட்டை, மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 20) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வாழப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணாவரம் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

News June 18, 2024

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிமுக புகார்

image

வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதன் விளைவாக 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினகரன் தலைமையில் அம்மூர் பேரூராட்சி கவுன்சிலர் ரகு, சசிதரன் பாரதிதாசன் ஆகியோர் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் இன்று மனு கொடுத்தனர்.

News June 18, 2024

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

image

சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்குட்பட்ட ராமானுஜர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று குடும்பத்துடன் வந்த போது அவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை திருடியது தெரியவந்தது. கொண்டபாளையம் போலீசில் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 17, 2024

ராணிப்பேட்டை: 3,000க்கும் மேற்பட்டோர் கூடி தொழுகை

image

பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராணிப்பேட்டையில் உள்ள ஈத் கா மைதானத்தில் 3,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

News June 17, 2024

அரக்கோணம்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு

image

அரக்கோணம் மாதவ நகரை சேர்ந்தவர் கண்ணன்(21). இவருக்கும் வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஜூன் 16) மாலை ஹவுசிங் போர்டு பகுதியில் கண்ணனை பார்த்த மணி தலை மற்றும் காதில் கத்தியால் வெட்டினார். தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 16, 2024

சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம் நிறுத்தம்

image

வாலாஜா அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட சமூக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நான்கு சிறுமிகளின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். மேலும், 4 சிறுமிகளும் வேலூர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News June 16, 2024

ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

image

நெமிலி தாலுகா காட்டுப்பாக்கம் கிராமத்தின் அருகில் பசும்பிலி ஏரிக்கரையில் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 15 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இன்று மதியம் ஏரிக்கரையில் செல்லும் போது நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சங்கர் என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 16, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை, மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, “குழந்தை திருமணங்கள் தடுப்பதில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பொறுப்புணர்ந்து ஊழியர்கள் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

News June 16, 2024

ராணிப்பேட்டை: ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

பக்ரீத் பண்டிகையையொட்டி ராணிப்பேட்டை வாரசந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  இதில், ஆடுகளின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் அமோகமாக நடைபெற்றது சுமாா் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளதால், வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!