Chennai

News July 30, 2024

கேரளாவிற்கு உதவிகள் செய்ய முதலமைச்சர் உத்தரவு

image

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் எனவும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News July 30, 2024

வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை

image

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 589 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரூ.13.98 கோடி மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News July 30, 2024

சென்னையில் தொழில் உரிமம் கட்டணம் உயர்வு

image

சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35% உயர்த்தி, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.21,000 – ரூ.30,000 வரை மாத சம்பளம் பெற்றால்: ரூ.135லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,000 – ரூ.45,000 வரை மாத சம்பளம் பெற்றால்: ரூ.315லிருந்து ரூ.430ஆகவும், ரூ.45,000 – ரூ.60,000 வரை மாத சம்பளம் பெற்றால்: ரூ.690லிருந்து ரூ.930ஆகவும் உயர்த்தப்பட்டது. கட்டணம் ரூ.500 – ரூ.15,000 வரை உயர்த்தப்படுகிறது.

News July 30, 2024

மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் கைது

image

மக்களை தேடி மருத்துவ பணியாளா்கள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் இன்று (ஜூலை 30) காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், தங்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் பணியாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

News July 30, 2024

2ஆவது நாளாக ஆசிரியர்கள் கைது

image

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகம் முன்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சேர்ந்த ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தபோது ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2ஆவது நாளாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த ஆசிரியர்களை கைது செய்துள்ளனர்.

News July 30, 2024

அம்மா உணவகங்களுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு

image

சமீபத்தில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 390 அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படும் 23,848 பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை மாற்ற 7 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News July 30, 2024

மாடுகளுக்கான அபராதம் உயர்வு விவரங்கள்

image

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், இன்று மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும், மீண்டும் அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும், 3ஆம் நாளில் இருந்து பராமரிப்பு செலவாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்படும் என தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.

News July 30, 2024

ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு மௌன அஞ்சலி

image

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிகளை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், மாமன்ற கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு இரங்கல் நிறைவேற்றப்பட்டது.

News July 30, 2024

பூக்களின் விலை தொடர்ந்து உயர்வு

image

சென்னை கோயம்பேடு பூ சந்தையில் ஆடி மாதத்தை முன்னிட்டு, கடந்த 2 வாரங்களாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ரோஜா பூ ரூ.150, மல்லி ரூ.700, சாமந்தி பூ ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.1800, முல்லை ரூ.600, அரளி பூ ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.140 சாக்லேட் ரோஜா ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

News July 30, 2024

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

image

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், அம்மா உணவகங்களுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களின் தரமும் உயர்த்தப்படவுள்ளன.

error: Content is protected !!