Chennai

News August 5, 2024

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி

image

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் தொடக்கத்தில் இயக்குனர்களை கேட்காமல் ஒரு காட்சியை இணைத்ததற்கு நடிகர் விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களும் இயக்குனரும் கலந்து பேசி இன்று முதல் அக்காட்சிகள் திரையரங்குகளில் நீக்கப்பட்டு பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது என்றும் மக்கள் மகிழ்ச்சியாக சென்று திரைப்படத்தை பார்க்கலாம் எனவும் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள ZERO IS GOOD

image

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்க சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்க ZERO IS GOOD என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் குறிப்பாக எதை உணர்த்துகிறது என்ற கேள்வியும், ஆர்வமும் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.

News August 5, 2024

சமூக நீதிக்கு எதிரானது திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்

image

சென்னை தி.நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “பட்டியலின சமுகம், வன்னியர் சமூகம் இந்த இரண்டு பெரிய சமூகங்களும் முன்னேறினால் தான் சமூகம் முன்னேறும். 1989-இல் 107 சமுதாயங்கள் தான் MBC-இல் இருந்தது. இப்போது 115 சமூகங்கள் உள்ளன. அதில், 114 சமுதாயங்கள் தமிழக மக்கள் தொகையில் 6.7% மக்கள் தொகையில் உள்ளன. சமூக நீதிக்கு எதிரான செயலை திமுக அரசு செய்து வருகிறது” என்றார்.

News August 5, 2024

சென்னையில் ஒரே வாரத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

சென்னையில் கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட‌ 813 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஜூலை 29 முதல் நேற்று வரையிலான ஒரு வார காலத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 5, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கு: 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிதரன், சிவசக்தி ஆகிய 5 பேரை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 5, 2024

உலக அழகி போட்டியில் தாய் – மகள் வெற்றி

image

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ‘ராயல் க்ரூஸ்’ என்ற கப்பலில் உலக அழகி போட்டி நடைபெற்றது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த ஹெலன் நளினி ‘மிஸ் ஸ்பிரிட் ஆப் வோர்ல்டு யுனிவர்ஸ்’ மற்றும் ‘மிஸஸ் இன்டர்நேஷனல் வோர்ல்டு பீப்பிள்’ பட்டங்களையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி ‘மிஸ் வோர்ல்டு யுனிவர்சல் 2024’ பட்டத்தை வென்றுள்ளார்.

News August 5, 2024

பருவமழை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்

image

சென்னை கொளத்தூரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் எந்தளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய அளவில் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சியை காட்ட சொல்லுங்கள். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

News August 5, 2024

மெரினாவில் விபத்து: 5 வயது குழந்தை பலி

image

காவலர் வாகனம் மோதி, 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடங்குப்பத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது மகன் தர்ஷன் (5) உடன் ஆட்டோவில் கண்ணகி சிலை நோக்கி நேற்று சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த போலீசார் வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில், தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாகனத்தை இயக்கிய காவலர் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News August 5, 2024

போதைப் பொருட்கள்தான் கொலைகளுக்கு காரணம்

image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியிலும் கொலைச் சம்பவங்கள் நடந்தன. இதைத்தடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்போடு இருக்கின்றனர். போதைப் பொருட்கள் தான் இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது” என்றார்.

News August 5, 2024

சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

image

சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!