Chennai

News July 22, 2024

மகளிர் ஆணைய அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையம்

image

சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தேசிய மகளிர் ஆணையத்தின் ரூ.2 லட்சம் நிதியுதவி பெற்று மாநில இலவச சட்ட பணிகள் ஆணைய குழுவுடன் இணைந்து சேப்பாக்கம் அலுவலகத்தில் இலவச சட்ட சேவை மையத்தை அமைத்துள்ளது. இந்த மையம் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 முதல் 5 மணி வரை செயல்படும்.

News July 22, 2024

ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு

image

நிலவில் சந்திராயன் 3 ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதனை ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, “அனைத்து குடிமக்களையும் இந்த நடவடிக்கைகளில் பங்கேற்கவும், நாடு தழுவிய கொண்டாட்டங்களில் ஈடுபடவும் அழைக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

பால் உற்பத்தியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

image

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் நிதி நிலையினை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பணியாளர் விநியோகம், சிக்கன நடவடிக்கை, உட்கட்டமைப்பை பயன்படுத்துதல், விற்பனைக்கான இலக்கை அடைத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஆவின் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News July 22, 2024

ரயில்கள் ரத்து திரும்பப் பெறப்பட்டது

image

சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில்கள் ரத்து செய்யப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஜூலை23) முதல் ஆகஸ்ட் 02 வரை ரயில்கள் வழக்கமான கால அட்டவணையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27, 28 இரு தேதிகளிலும், ஆகஸ்ட் 03 முதல் 14 வரையிலும் முன்னர் அறிவிக்கப்பட்டது போல் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

சென்னை குடிநீர் வாரிய ஆலோசனை கூட்டம்

image

சென்னை குடிநீர் வாரியத்தின் 348-வது வாரியக் குழுக் கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் குடிநீர் வாரியத் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் த.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News July 22, 2024

மாநகராட்சி சார்பில் 1469 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன

image

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மாடுகளால் பெரிதும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில்  இதுவரை 1469 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.60.29 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 22, 2024

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் அழைப்பு

image

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆய்வு மேற்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து சேவைகளை அதிகப்படுத்துவது, மின்சார பேருந்துகளுக்கு சார்ஜிங் வசதிகளை உருவாக்குவது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. இதில் விருப்பமுள்ள நிறுவனங்கள் பங்கேற்க ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

News July 22, 2024

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் பாதிப்பா?

image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று இரவு முதல் ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இரண்டு முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் அடுத்து என்ன சிகிச்சைகள் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் குழு நாளை காலை முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 22, 2024

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

image

ஜூலை 19 அன்று சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும், வழக்கறிஞர்கள் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வழக்கறிஞர் ஒருவரின் முறையீட்டின் படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே. குமரேஷ்பாபு அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

News July 22, 2024

பாலின சமத்துவ வரவு செலவு திட்ட பயிற்சி தொடக்கம்

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அரசுத்துறை சார்ந்த 50 அலுவலர்களுக்கு 3 நாட்கள் பாலின சமத்துவ வரவு செலவு திட்ட பயிற்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் செயல்படுத்தப்படும் சட்டங்கள், திட்டங்கள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.

error: Content is protected !!