Chennai

News September 20, 2024

1205 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்

image

சென்னையின், தெருக்களைப் பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க, சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் இழுவை வாகனங்களைப் பயன்படுத்தி அகற்றப்படுகின்றன. இன்று மாலை புரசைவாக்கம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் அகற்றப்பட்டன. இதுவரை, சென்னை நகர வீதிகளில் இருந்து 1,205 வாகனங்களை அகற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

News September 20, 2024

சென்னையில் இன்று இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள்

image

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்பாக்கம் பகுதியில் l சகாதேவன், அடையார், தாமஸ் மவுண்ட் பகுதியில் டி.ஆர் ராஜா, தியாகராய நகர் பகுதியில் ஆர்.பி ஐயப்பன், ஆகிய அதிகாரிகள் இன்று இரவு வாகன ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.

News September 20, 2024

உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன், விதிகளை வகுத்து அதை பின்பற்ற கோரிய வழக்குகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடந்ததாக வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த நிறுவனம் அளித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News September 20, 2024

சென்னையில் அடுத்தடுத்து பிரியாணி கடைகளுக்கு சீல்

image

சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் உள்ள எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.கடந்த 18 ஆம் தேதி பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் நேற்று ஆய்வு செய்தனர். இன்று மாலை எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று அப்பு பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 20, 2024

சிபிசிஐடிக்கு சென்னை ஹைகோர்ட் பாராட்டு

image

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கில் சிறைத்துறை டிஐஜி மீது உடனே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள சிவக்குமார் என்பவரை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்த சிபிசிஐடிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

News September 20, 2024

சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வீரர்களுக்கு நிதி உதவி

image

உஸ்பெகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 8th Asian Pencak Silat Championship (APSC) போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து 7 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களின் பயணம், உணவு, போட்டிக்கான கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தலா ரூ.1.50 லட்சம் என்கிற வகையில் மொத்தம் ரூபாய் 10.50 லட்சத்துக்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

News September 20, 2024

மெரினா கடற்கரையில் விமான சாகசம்

image

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ஆம் தேதி விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்திய விமானப்படை சார்பில் நடைபெறும் இந்த விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளை மக்கள் நேரில் வந்து கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், சென்னை வானத்தில் யாரும் கண்டிராத விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 பேர் முன்னதாக குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், தற்போது மேலும், 15 குற்றவாளிகள் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், ரவுடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்.

News September 20, 2024

அம்மா உணவகம் அரசு பள்ளியா என இபிஎஸ் கேள்வி

image

சென்னை ஆலந்தூர் அருகே அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடக செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், ஆலந்தூர் அம்மா உணவகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

News September 20, 2024

ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளிய சென்னை

image

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் இரண்டாவது ஓடுதளம் பயன்பாட்டிற்கு வந்த பின் சேவை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் முதல் பயன்பாட்டிற்கு வந்த இரண்டாவது ஓடு தளம் சேவைகளை அதிகரித்து, அதிக விமானங்களை கையாள்வதில் ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது சென்னை. அதிக விமான சேவையில் மும்பை, பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது.

error: Content is protected !!