News March 21, 2024

தேர்தல் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு

image

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ரூ.50 லட்சம் ஆயுள் காப்பீடு செய்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இ.டி.சி வழங்கி, பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

News March 21, 2024

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடக்கம்

image

ஐபிஎல்தொடர், சென்னையில் நாளை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் இத்தொடர் ஆரம்பமாகிறது. இதையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் தொடக்க போட்டிகள், சென்னையில் நடைபெறுவது இது 5ஆவது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2019 & 2021ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது.

News March 21, 2024

இதுவரை ஒரு இந்தியர் கூட வசிக்காத நாடுகள் அறிவோமா?

image

உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்கின்றனர். ஆனால் ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் நகரம், தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா, நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள துவாலு என்றழைக்கப்படும் எல்லீஸ் தீவுகள் ஆகிய நாடுகளில் தூதரக அதிகாரிகள், கைதிகள் தவிர்த்து, எந்தவொரு இந்தியரும் இதுவரை குடியேறியதில்லையாம்.

News March 21, 2024

திருஷ்டி தோஷம் போக்கும் நல்லெண்ணெய்

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் எனப் பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்க, ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் முகம் பார்த்து, பெயரைச் சொல்ல வேண்டும். பின்னர் அதனை தானமாக கொடுத்ததால் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்.

News March 21, 2024

தோனி மேலும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும்

image

தோனி மேலும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி கிரிக்கெட் தொடராக கருதப்படுகிறது. இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. அவர் மேலும் 5 ஆண்டுகளோ அல்லது 2-3 ஆண்டுகளோ கிரிக்கெட் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

News March 21, 2024

இலவச அறிவிப்பு வழக்கு இன்று விசாரணை

image

தேர்தல் பிரசாரத்தில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிரான மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சின்னத்தை முடக்கவும் உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மனு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

News March 21, 2024

தாமரை சின்னத்தில் போட்டி என அறிவித்தார்

image

ஓபிஎஸ் அணி, தமாகா தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை பாஜக நிறைவு செய்துள்ளது. அந்தவகையில், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தேவநாதன் யாதவ் கூறும்போது, தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்டுள்ளதாகவும், தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம் என்றும் கூறினார்.

News March 21, 2024

ரஷ்யாவில் போர் வேண்டாமென எழுதிய பெண்ணுக்கு சிறை

image

ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டில் போர் வேண்டாமென சிவப்பு மையில் எழுதிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், ராணுவத்தை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபட்டதாக அலெக்ஸாண்ட்ரா சிரியாட்டியேவா மீது குற்றம்சாட்டிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம், 8 நாள்கள் சிறையுடன், 40,000 ரூபிள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News March 21, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ➤பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ➤ திருச்சியில் நாளை (மார்ச் 22) மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். ➤குஜராத் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார்.

News March 21, 2024

முதல்நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு செய்தவர்களில் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் அடங்குவர். ஆனால் பிரதான அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

error: Content is protected !!