News March 28, 2024

சித்தார்த்-அதிதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

image

நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அதிதியை நிச்சயம் செய்து கொண்டார். நீண்ட நாள்களாக காதலித்து வந்த இருவரும், நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக செல்வதுண்டு. ஆனால், தங்கள் காதல் உறவை குறித்து எங்குமே உறுதிபடுத்தவில்லை. இதனிடையே, நேற்று இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், இன்று தாங்கள் நிச்சயம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

News March 28, 2024

செல்வ கணபதியின் வேட்பு மனு ஏற்பு

image

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்புமனு நீண்ட இழுபறிக்கு பின்னர் ஏற்கப்பட்டது. 2 தொகுதிகளில் அவருக்கு வாக்குரிமை இருப்பதாகவும், வழக்கு தொடர்பான விவரங்களை அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை எனவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பரிசீலனை செய்த தேர்தல் அலுவலரும், சேலம் ஆட்சியருமான பிருந்தா தேவி, புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறியதுடன் அவரது வேட்பு மனுவை ஏற்பதாக அறிவித்தார்.

News March 28, 2024

குரூப் 1 தேர்வு: தேதி அறிவித்த TNPSC

image

90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி, துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்.27 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> செய்க.

News March 28, 2024

ஓபிஎஸ்-இன் கோரிக்கை நிராகரிப்பு

image

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்-இன் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு பலமுறை முயற்சி செய்த ஓபிஎஸ்-இன் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகியிருக்கிறது.

News March 28, 2024

கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்

image

தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் சத்தமில்லாமல் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளன. வழக்கமாக சாதாரண இருக்கை வசதி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு ரூ.700 முதல் ரூ.1,000 வரை கட்டணம் பெறப்படும். ஆனால் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் அதிகம் செல்வதை பயன்படுத்தி ரூ.5,000ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News March 28, 2024

வேட்புமனு பரிசீலனை நிறைவு

image

தமிழ்நாட்டில் வேட்புமனு பரிசீலனை 3 மணியுடன் நிறைவு பெற்றது. 39 தொகுதிகளுக்கு மொத்தம் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

News March 28, 2024

OnThisDay: சேவாக்கின் டெஸ்ட் சாதனை

image

2008ஆம் ஆண்டு இதே நாளில், முன்னாள் இந்திய வீரர் சேவாக் தனது 2ஆவது முச்சதத்தை பதிவு செய்தார். தென் ஆப்.,வுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில், 42 பவுண்டரி, 5 சிக்சர்கள் என விளாசிய சேவாக், மொத்தம் 319 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் முச்சதத்தை குவித்த அவர், 4 ஆண்டுகள் கழித்து தனது 2ஆவது முச்சதத்தை பதிவு செய்தார். இது ஒரு தொடக்க இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

News March 28, 2024

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மழுப்புகிறார்

image

கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கெஜ்ரிவால் மழுப்புவதாக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய ED, மேலும் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி கேட்டது. அப்போது, டிஜிட்டல் சாதனங்களின் பாஸ்வேர்டை தர அவர் மறுப்பதாக குற்றம்சாட்டினர். இதனிடையே, முகாந்திரம் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக கெஜ்ரிவால் தரப்பு கூறியுள்ளது.

News March 28, 2024

தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி

image

தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்றவை 20 பேரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம். முதலாவதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வழங்கியது. அதில், முதல்வர் ஸ்டாலின் உட்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து, பாஜக அளித்த பட்டியலில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

News March 28, 2024

அக்னிவீர் திட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றம்

image

அக்னிவீர் திட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றம் செய்ய அரசு தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய அவர், “பாதுகாப்புப் படை இளம்தலைமுறையினரை கொண்டதாக இருப்பது அவசியம். எதிர்காலத்தில் அக்னிவீர் திட்டத்தில் சேருவோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். தேவைப்பட்டால், அக்னிவீர் திட்டத்தில் மாற்றம் செய்வோம்” என்றார்.

error: Content is protected !!