News April 10, 2024

முதல் ஆட்டநாயகன் விருது வென்ற நிதிஷ் குமார்

image

பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என மொத்தமாக 64(37) ரன்கள் குவித்தார். மேலும், பஞ்சாப் வீரர் ஜிதேஷ் ஷர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி, பந்துவீச்சிலும் அசத்தினார். இது அவரது முதல் ஆட்டநாயகன் விருது ஆகும்.

News April 10, 2024

25 ஆண்டுகளை நிறைவு செய்த ‘படையப்பா’

image

ரஜினி, ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘படையப்பா’ திரைப்படம், இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம், நீலாம்பரி கதாபாத்திரம், ரஜினியின் பன்ச் வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பியது. மேலும், உலகம் முழுவதும் 200 ஃபிலிம்களுக்கு மேல் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு.

News April 10, 2024

அதிமுகவுக்கு அழகு முத்துக்கோன் பேரவை ஆதரவு

image

அழகு முத்துக்கோன் பேரவையின் நிறுவனத் தலைவர் K.P.வேல்ராஜ் தலைமையில், அப்பேரவையின் மாநில நிர்வாகிகள் இபிஎஸ்சை நேரில் சந்தித்து, அதிமுகவுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். அதற்கு, இபிஎஸ் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இருப்பதால், யாதவ் சமூக மக்கள் வாக்கு, I.N.D.I.A கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

News April 10, 2024

முதலிடத்திற்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 5ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவ் என்பவருக்கு எதிரான இப்போட்டியில், குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், குகேஷ் தனது உத்திகளை சரியாக செயல்படுத்தி நிஜாத்தை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 3.5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

News April 10, 2024

சீனப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர் வைத்தால்…

image

சீனப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர்களை வைத்தால், அது இந்தியாவுக்கு சொந்தமாகி விடுமா என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல் மாநிலத்தை உரிமை கொண்டாடும் சீனா, அண்மையில் அந்த மாநிலத்திலுள்ள பகுதிகளுக்கு புதிய பெயர் வைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், சீனா பெயர் வைத்தால், அது சீனப் பகுதிகளாகி விடாது, எப்போதும் இந்திய பகுதிகள்தான் என்றார்.

News April 10, 2024

‘வேட்டையன்’ படத்தில் ஃபகத் பாசில்?

image

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில், மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரை வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த ஃபகத் பாசில், முதல்முறையாக இந்தப் படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார். ஞானவேல் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இம்மாதத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்து அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

News April 10, 2024

BREAKING : காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்

image

மதுரை, திருமங்கலத்தில் இன்று காலை கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பெரும் துயரமான செய்தி வெளியாகியுள்ளது. சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய போது, கார் கவிழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 10, 2024

புதிதாக வருகிறது 112 மருத்துவ கல்லூரிகள்

image

நாடு முழுவதும் புதிதாக 112 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை உயர்த்த வசதியாக, கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி, 112 மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சம், உ.பி.யில் 112 கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

News April 10, 2024

உளவியல் ரீதியாக நெருக்கடி

image

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர், மத்திய அரசு உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டினார். அத்துடன், பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை என்றும், அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News April 10, 2024

அரசுப் பள்ளிகளில் 3.20 லட்சம் மாணவர் சேர்க்கை

image

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1 முதல் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

error: Content is protected !!