India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபைத் தொகுதித் தேர்தலுக்கும் சேர்த்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 272 வாக்குச்சாவடிகளை கொண்ட அத்தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என 2 வாக்குகளை அத்தொகுதி வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர். 1 மணி நிலவரப்படி அங்கு 34.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது சின்னமான ஒலி வாங்கிக்கு அருகில் இருக்கும் விளக்கு எரியவில்லை என்ற புகாரினால் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அத்தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார் நடிகர் வடிவேலு. வாக்களித்த பின் பேசிய அவர், இந்திய குடிமகனாக, என் மனதில் உள்ள கருத்தை எனது விரல் மூலமாக பதிவு செய்துள்ளேன் என்றார். அப்போது சிவாஜியின் ‘இந்திய நாடு என் நாடு, இந்தியன் என்பது என் பேரு’ என்ற பாடலையும் பாடிக்காட்டி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் பட்டியலில் இல்லாததால் அவர் அதிர்ச்சியடைந்தார். சென்னை வளசரவாக்கத்தில் சூரி தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றார். அப்போது அவரது பெயர் பட்டியலில் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்தார். அவரது மனைவி மட்டும் வாக்கினை பதிவு செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ஜனநாயக உரிமையை செலுத்த முடியாதது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.
மதியம் 3 மணி நிலவரப்படி, திரிபுராவில் அதிகபட்சமாக 68.35% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாக பிகாரில் 39.73% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மற்றபடி, அருணாச்சல் – 55.05%, அசாம் – 60.7%, சத்தீஸ்கர் – 58.14%, ஜம்மு காஷ்மீர் – 57.09%, மத்திய பிரதேசம் – 53.4%, மகாராஷ்டிரா – 44.12%, மணிப்பூர் – 63.03%, புதுச்சேரி – 58.86%, ராஜஸ்தான் – 41.51%, தமிழ்நாடு – 51.01% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக களம் இறங்கினார். அவரை எதிர்த்து அதே பெயரில் பல பன்னீர்செல்வங்கள் களம் இறங்கியதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், வாக்கு இயந்திரத்தில் அடுத்தடுத்து ஓ.பன்னீசெல்வம் என்று பெயர்கள் இடம்பெற்றிருப்பது மக்களை குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர். இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதேபோல், நடிகர் ஜெயம் ரவி, SV சேகர், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஜனனி மற்றும் அதுல்யா ரவி உள்ளிட்ட பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்குமாறு தவெக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலையிலேயே அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இந்நிலையில், தேர்தலில் வாக்களித்து நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக நிர்வாகியான குஷ்பு #Vote4INDIA என X பக்கத்தில் பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த அவர், இந்தியாவிற்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தான் எது செய்தாலும் சிலர் பிரச்னையாக்குவதாக குற்றம்சாட்டிய அவர், குழப்பத்தை உருவாக்க நினைப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா கூட்டணியை குறிப்பதாக இருந்தால் #Vote4I.N.D.I.A. என பதிவிட்டிருப்பேன் என்றார்.
மதியம் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. புதுச்சேரியில் 58.34 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியிருகின்றன. இத்தகவலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.