news

News March 22, 2024

சற்றுமுன்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் காவல்

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் ED காவல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

News March 22, 2024

தனிநபர் கடனுக்கு செயலாக்கக் கட்டணம் இல்லை

image

₹20 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை (Processing Fee) எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. “பண்டிகை தமாக்கா” என்ற பெயரில் மார்ச் 31 வரை இந்த சலுகை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ள எஸ்பிஐ, குறைந்தபட்ச மாத வருமானம் ₹15,000 இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

250ஆவது போட்டிக்கு ருதுராஜ் கேப்டன்

image

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 250ஆவது போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுகிறார். இதற்கு முன் சிஎஸ்கே அணி விளையாடிய 50, 100, 150, 200ஆவது போட்டிகளுக்கு தோனி தலைமை தாங்கினார். சென்னையில் நடைபெறும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

News March 22, 2024

ராஜ் பவனில் இருந்து தேர்தல் பரப்புரை ஆரம்பம்

image

மக்களவைத் தேர்தல் பரப்புரையை ராஜ் பவனில் இருந்து ஆரம்பித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், ” பொன்முடி பதவியேற்பு விழாவில், ஆளுநரிடம் இன்று தேர்தல் பரப்புரைக்கு செல்வதாக கூறினேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆகையால், ஆளுநர் மாளிகையில் இருந்தே பரப்புரையை ஆரம்பித்துவிட்டேன். ராஜ் பவனில் தொடங்கியதை தொண்டர்கள் வெற்றி பயணமாக மாற்ற வேண்டும்” என்றார்.

News March 22, 2024

கோலிக்கு இன்னும் 15 ரன்கள் தேவை

image

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை 985 ரன்கள் எடுத்துள்ள அவர், இன்னும் 15 ரன்கள் அடித்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். முதல் இடத்தில் ஷிகர் தவான் (1,057) உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் தோனி (740) முதல் இடத்தில் உள்ளார்.

News March 22, 2024

4 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், ஈரோடு 102 டிகிரி F, கரூர் (பரமத்தி), சேலம் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் தலா 100 டிகிரி F வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்பதால் பகல் 12-3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

News March 22, 2024

ஜனநாயகத்தை பாஜக குழிதோண்டி புதைத்துவிட்டது

image

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட பாஜக, இந்த தேர்தலில் வீழ்த்தப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், “மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும். அதை தடுக்கவே முதல்வர் இந்த வெற்றி கூட்டணியை அமைத்துள்ளார். தமிழக மக்களை பழிவாங்கும் பாஜக அரசை இந்த தேர்தலில் நாட்டை விட்டே துரத்த வேண்டும்” என்றார்.

News March 22, 2024

IPL: சென்னை அணி பவுலிங்

image

ஐபிஎல் 17வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பவுலிங் செய்ய உள்ளது. தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என கூறப்படுவதால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனியைக் காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த போட்டியில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு?

News March 22, 2024

தோல்வி பயத்தின் உச்சத்தில் மோடி இருக்கிறார்

image

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் மோடிக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “மோடி வாரம் வாரம் தமிழகத்துக்கு வருகிறார். அவரிடம் தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டு வருகிறேன். ஆனால் அதற்கு மட்டும் அவரால் பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டுக்கு எதாவது நல்லது செய்தால் தானே அவரால் சொல்ல முடியும். இல்லை என்பதால் திமுகவை விமர்சித்துவிட்டு செல்கிறார்” என்றார்.

News March 22, 2024

கோலாகலமாகத் தொடங்கியது ஐபிஎல் தொடக்க விழா

image

ஐபிஎல் 17ஆவது சீசன் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சிவாஜி படத்தின் ‘பல்லேலக்கா’ பாடலை பாடி அசத்தினார். இந்த கலை நிகழ்ச்சிகளை முடிந்த பின் சிஎஸ்கே – ஆர்சிபி போட்டி தொடங்கும்.

error: Content is protected !!